Wednesday, July 18, 2012

பேரம்

நடராஜனக்கு 57 வயது தான் ஆகப்போகிறது. ஆனால் தலை முழுக்க பளபளவென்று வழுக்கை.பக்கத்தில் சந்திர பிம்பம் போல கொஞ்சம் கேசம் உண்டு.ஞாயிறு காலை சீக்கிரம் சலூனுக்கு போய்விட்டால் ரொம்ப காத்திருக்க வேண்டாம்.ஆறு மணிக்கே காபி குடித்துவிட்டு கிளம்பினார்.

அந்த சமயம் வாசலில் கீரைக்காரி'முளை கீரை,அரை கீரை,சிறு கீரை,பொன்னாங்காணி கீரை" என்று கூவிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். "சாமி உன் கையால போணி பண்ணு.எல்லாம் வித்து போய்விடும்.அம்மா தினம் வாங்கும். ஆனால் உன் கை ராசி " என்றாள்.

சரி,முளை கீரை ரெண்டு கட்டு கொடு.என்ன விலை?

' "கட்டு பத்து ரூபாய்.20 ரூபாய் கொடு"

"இது என்ன அநியாயமா இருக்கே.இரண்டும் சேர்த்து 15 ரூபாய் தான்.வாடிக்கையாக கொடுக்கிற வீட்டுக்கே இப்படி தாறு மாறாக விலை சொல்லறியே"

"நீ என்ன புச்சா வாங்கற மாதிரி பேசறயே.ஆறு மாதமா இதே விலைதான்.ஊரிலே எல்லாம் கண்ணு மண்ணு தெரியாம ஏறிகிடக்கு, நீ ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கணக்கு பார்க்கறியே.
நேரமாவுது சீக்கிரம் 20 .ரூபாய் கொடு"

"சொன்னா சொன்னது தான்.இஷ்டமிருந்தால் கொடு இல்லாட்டா நடையை கட்டு"

"ஏழை வயத்தில அடிக்கறயே.உன் கையால போணி பண்ணனும் நினைச்சேன்.சரி,18 ரூபாய் கொடு" என்றாள்.

கீரையை எடுத்துகொண்டு ஒரு பெருமிதத்துடன் உள்ளே வந்தார்.

"நான் வாயை அவள் முன்னால் திறக்க வேண்டாமென்று இருந்தேன்.ஏழைகள் கிட்ட என்ன பேரம்?ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்ல நம்ம சொத்தா தேய்ந்து விடும்.நீங்க செய்கிறது சரியாக படவில்லை." என்றாள் அவரின் மனைவி.

"உனக்கு என்ன தெரியும்?நீயா சம்பாதிக்கறே?.சரி நான் சலூன் போகிறேன் “


சலூனில் நான்கு நபர்கள் காத்துகொண்டிருன்தனர்.அரை மணிக்கு பிறகு இவர் முறை வந்தது.ஐந்தே நிமிடத்தில் முடி திருத்தல் முடிந்தது.இருந்தால் தானே திருத்த..அவர் எதிரில் விலை பட்டியலில் முடி திருத்த ரூபாய் 80 என எழுதி இருந்தது.,முடி திருத்துபவர் பிரஷால் பல தடவை தடவினார்.இவர் 100 ரூபாய் நோட்டை நீட்ட, அவர் ரெண்டு பத்து ரூபாயை நீட்டினார்..இவர் கையால் நீயே வைத்து கொள் என்கிற ஜாடையுடன் வெளியே நடந்தார்.முடி திருத்துபவர் ஒரு புன்சிரிப்புடன் சின்ன சல்யூட் அடித்தார்

கீரைக்காரியுடன் பேரம் பேசிய இவரின் நடையில் என்னே ஒரு உற்சாகம். வேடிக்கைதான் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்



Tuesday, July 17, 2012

குழந்தை நலன்

தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் குழந்தை தொழிலாளர்களின் அவலம் பற்றி கூட்டம்..சேரியின் பக்கத்தில் கூட்டம் என்பதால் நல்ல கூட்டம்.முக்கியமாக தாய்மார்களும் குழன்ன்தைகளும்தான் காணப்பட்டனர்.

"நமது நாட்டில் ஏழ்மை காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது.இருப்பினும் டி கடை,,ஓட்டல்கள்,மளிகை i மற்றும் வணிக நிறுவனங்களில்,

தீப்பெட்டி,பட்டாசு தொழில்களில் முக்கியமாக வீடுகளில் ஈடுபடுத்தபடுகின்றனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று ராஜமாணிக்கம், முழங்கினார்.

"நாட்டில் ஒரு குழந்தை வேலையில் ஈடுபட்டால் கூட நமக்கு பெரிய இழுக்கு என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.பெற்றோர்கள் சம்மதித்தாலும் இந்த அவலம் அனுமதிக்கப்படக்கூடாது. குழந்தைகளின் கல்வி ,உடல் நலம்,சமூக மேம்பாடு பாதிக்கப்படும் அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ளுகிறேன்.ஒவ்வொரு குழந்தைக்காக ஏழை குடும்பங்களுக்கு மாதம் 1000 ரூபாய் அரசு கொடுக்க வேண்டும்." என்றவுடன் பலத்த கைதட்டல்

காரிலிருந்து வீட்டிற்க்குள் நுழையும்போதே "மீனாக்ஷி,,அந்த வேலைக்கார சிறுவன் பாபுவை மேலே அனுப்பு.கூட்டத்தில் நின்று கொண்டே பேசியதில் கால்கள் ஒரே வலி" என்றார்

படுக்கையில் காலை நீட்டி படுத்துகொண்டார்.அந்த 10 வயது பாபு அவரின் கால்களை நின்றுகொண்டே பிடித்து விட்டு கொண்டிருந்தான்..அவர்'அம்மா,அப்பா' என்று முனகிக்கொண்டு "அழுத்தி பிடிடா,பேமானி"என்றார். கிட்டத்தட்ட ஒரு மணி பிடித்தும் போறும் என்று சொல்லாமல் அந்த சிறுவன் தலையில் நறுக்கென்று குட்டினார்."தூங்கி வழிகிறாயே,நாயே.. தோலை உறிச்சுடுவேன், நன்னா பலமா பிடி" என்று திட்டினார் குழந்தை தொழிலாளர்களின் ஆதரவாளர்.




Monday, July 16, 2012

ஏழைகள் சிரிப்பில் இறைவன்

அன்று திருவிழா.கோவிலில் ஒரே கூட்டம்.வழி நெடுக இரண்டு பக்கமும் பிச்சைகாரர்கள் கூட்டம்.கைகளில் கைக்குழந்தையுடன் தகர குவளைகளோடு தாய்மார்கள்.வருவோர் போவோர் ஒவ்வொரிடமும் அய்யா,சாமி,தாயே, என்று பரிதாப குரல்கள்..அதை கண்டுகொள்ளாமல் எல்லோரும் தைய்வத்தை காணவே மும்முரம் காட்டி க்யூவில் நிற்க முன்னே சென்றார்கள்..

பெரிய காரிலிருந்து தாட்டியான மனிதர் இறங்கினார் சரிகை வேஷ்டி இடுப்பில் அங்க வஸ்திரம் விபூதிக்கடியி l பெரிய சந்தன பொட்டுடன் கூடிய குங்குமம்.கழுத்தில் தங்க சங்கிலி.பார்த்தால் பெரும் பணக்கார தோற்றம்.

பக்தர்கள் கும்பலை பார்த்து மலைத்து விட்டார்.பிச்சைக்கார கூட்டத்தி அய்யா,சாமி ஒலி உச்சத்தை அடைந்தது

அந்த சமயம் காக்கி உடுப்புடன் கோவில் சிப்பந்தி போல ஒருவர் அவரை நெருங்கினார்.கசமுசவென்று சிறிது நாழி பேச்சு..ஜேபியிலிருந்து 200ரூபாய்கள் கைமாறியது..

தப தபவென்று பணக்காரர் சிப்பந்தியுடன் முன்னேறினார்.சந்நிதியை நெருங்க நெருங்க கூட்டம் அலை மோதியது. வரிசையில் மக்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த சிப்பந்தி"இங்கு சற்று இருங்கள்.ஒரு நொடியில் வந்து விடுகிறேன்"என்று கூறி நகர்ந்தார்.ஒரு நொடி ஒரு மனியாகியாது.

சரி,ஏமாந்து விட்டோம்.அடுத்த முறை சற்று முன்னதாகவே வந்து தரிசனம் பண்ணலாம் என்கிற எண்ணத்தோடு வெளியில் வந்தார்.

அதே பிச்சைக்கார கூட்டம் அய்யா சாமி கூப்பாடோடு சொல்லியது "அந்த ஆளு ஏமாத்து பேர்வழி.உங்களுக்கு ஜாடை மாடையாக காமித்தோம்.நீங்கதான் எங்கள் பக்கம் பார்க்கவில்லையே." என்றார்கள்

"ஒரு நிமிஷம்.இதோ வந்து விட்டேன் " என்று பக்கத்து கடைகள் பக்கம் போய்விட்டு திரும்பி வந்தவர் "வரிசையாக உட்காருங்கள்" என்றார்.

ஒவ்வொருவரிடமும் புத்தம் புதிய 5ரூபாய் நாணயம் கொடுத்தார்.."எல்லோருக்கும் கிடைச்சுதா?யாருக்கும் விட்டுப்போகலையே?"

எல்லோர் முகத்திலும் ஒரு சிரிப்பு,சந்தோஷம்..,தரிசனம் பண்ணிய ஒரு திருப்தியுடன் காருக்கு சென்றார்

.


Sunday, July 15, 2012

வட்டியும் முதலும்

'அய்யா,ரெண்டு நாளா சாப்பிடலை.ஒரே பசி எதாவது கொடுத்தீங்கங்கன்னா கோடி புண்ணியம் உங்களுக்கு" என்றாள் சிறுமி

"போ,போ அவசரமாக கிளம்பிண்டு இருக்கேன்.அப்புறம் பார்க்கலாம் " என்றார் புண்ணியகோடி மோட்டார் பைக்கை உதைத்தவாறே.

"அய்யா,உயிர் போய்விடும் போல பசிக்கிறது.ஒரு 'பன்'நுக்காவது காசு கொடுங்க அய்யா".

."ஒரு தடவை சொன்னா தெரியாது,போ அப்பாலே"என்று சள்ளென்று விழுந்தார்

பெரிய அதிகாரி முன் குளு குளு அறையில் புண்ணியகோடி நின்று கொண்டிருந்தார்
.
"என்ன வேண்டும்" என்றார் முகத்தை அவர் பக்கம் திருப்பாமலேயே.

"போன வருஷமும் சம்பள உயர்வு ரொம்ப குறைவு.இந்த வருஷம் பார்த்து போட்டு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டு"

""வேற வேளை கிடையாதா?காலங்காலையில் தொந்திரவு பண்றீங்களே .அப்புறம் பார்க்கலாம்"என்றார் அதிகாரி

"இந்த நேரம் விட்டா உங்களை பார்க்க முடியாது.ரொம்ப கஷ்டமாக இருக்கு.பசங்க படிக்கறாங்க. கொஞ்சம் தயவு பண்ணனும்"

"ஒரு தடவை சொன்னா தெரியாது.போயிட்டு வாங்க.நான் மும்முரமாக இருக்கேன் "என்றார் சற்று எரிச்சலுடன்

Friday, July 13, 2012

செல்லப்பாவின் பஸ் பயணம்

பஸ் பழசா இருந்தாலும் சீட் சௌகரியமாகவே இருந்தது..இரவு 11 .மணிக்கு கிளம்பி விடியற்காலை சுவாமி மலை அருகில் உள்ள கிராமத்தில் போய் சேரும். பக்கத்து இருக்கையில் உள்ளவர் ஒரு சிரிப்புடன் 'கும்மோணம் வரைக்குமா?'என்றார்.

"இல்லை,சுவாமி மலை பக்கத்தில"என்றேன்

"அடடே,நானும் அது வரைக்கும் தான்.ஜாகை அங்கயே தானா?"

"இல்லை கிராமத்தை விட்டு கிளம்பி 30 வருஷங்கள் மேல ஆச்சு..ஒரு நண்பரை பார்க்க போகிறேன்.எங்கள் இருவருக்கும் கடித போக்குவரத்தும் இல்லை "

"பரவா இல்லையே.. நெடு நாளைய நண்பரை மறக்காமல் காண செல்கிறீர்களே. ரொம்ப நெருக்கமான நண்பரோ ?"

"அதெல்லாம் இல்லை..பழக்கம் விட்டு ரொம்ப வருஷங்களாச்சு.சொல்லப்போனால் அவன் சின்ன வயசிலேயே சுயங்காரி. ..தீசல்னு கூட சொல்லலாம்"

"அப்படி இருந்தும் நீங்க பெருந்தன்மையாக நட்பை விட்டு கொடுக்காம இருக்கீங்களே.ரொம்ப மெச்சத்தக்க விஷயம்".

"அப்படி எல்லாம் இல்லை. ஒரு காரியமாகத்தான் செல்கிறேன்.அவரின் முகம் கூட மனதில் நிழலாகத்தான் இருக்கு.இப்போ .ரொம்ப மாறி இருக்கலாம்".

“வெளி ஊரிலிருந்து பார்க்க போவதாக இருந்தால் காரியம் முக்யமானதாகத்தான் இருக்கணும்"என்று விஷயத்தை மேலும் அறிய கொக்கி போட்டார்."

"சரியாக சொன்னீர்களே.நண்பருக்கு ஒரு மகன் அமெரிக்காவில வேலை பார்க்கிறான்..என்னோட பெண்ணும் அவனுடன்தான் வேலை செய்கிறாள். இருவருக்கும் பிடித்து விட்டது.அதுதான் நண்பரை பார்த்து பழைய நட்பை புதுப்பித்து காரியத்தை முடிக்கலாம் என்று எண்ணம்."என்றேன்."

“நல்லது.ஆமாம், உங்கள் பெயர் என்ன, எந்த கிராமம்,,,யார் நண்பர்?”

"என் பெயர் செல்லப்பா,ஊர் பிள்ளைபாளையம்.அவர் பெயர் ரங்கஸ்வாமி"

"அவருடைய தகப்பனார் பெயர் என்னவோ?

"பட்டாமணி கிருஷ்ணஸ்வாமி என்று அழைப்பார்கள்,.அவரை உங்களுக்கு பரிச்சயமா?"

“நன்னா தெரியும் செல்லப்பா, நானேதான் அந்த சுயங்காரி ரங்கஸ்வாமி"என்று பலமாக குலுங்க குலுங்க சிரித்தார்
எனக்கு முகத்தில் ஈயாடவில்லை

Tuesday, July 10, 2012

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர்-5

காட்பாடி ஜங்க்ஷன்.முதல் மணி அடித்தாயிற்று. பக்கத்தில் உள்ள ஒரு 75 வயதான மூதாட்டி "இது பெங்களூரு தானே போறது?'என கேட்டார். பக்கத்தில் உள்ளவருக்கு தூக்கிவாரி போட்டது ..

"பாட்டி,இது மங்களூர் போற வண்டி. சீக்கிரம் சொல்லுங்க?. எது உங்கபெட்டி?இங்க உடனே இறங்கணும்..எழுந்துக்கங்க” என்று அந்த மூதாட்டியை பெட்டியுடன் இறக்கி விட்டார்..உடனேயே ரயிலும் கிளம்பி விட்டது.

பாட்டி மலங்க மலங்க விழித்து பார்த்தாள் பேரன் தப்பிதமாக ஏற்றிவிட்டான்..தனியாக வெளி ஊருக்கு இதற்கு முன் பயணம் பண்ணினதில்லை. பிளாட்பாரம் காலியாகிவிட்டது என்ன பண்ணுவது,யாரை கேட்பது என்று ஒண்ணும் புரியவில்லை.அழுகை வந்து விட்டது...

நல்ல வேளையாக ஒரு போர்ட்டர் "பாட்டியம்மா,பெட்டியை தூக்கணுமா?யாராச்சும் வந்து இருக்காங்களா?" என ஆதரவுடன் வினவினார்.

"இல்லையப்பா.தப்பாகிவிட்டது.பெங்களூரு வண்டிக்கு பதில் பேரன் வேற வண்டில ஏத்தி விட்டான்.நான் பெங்களூரு போகணும்.அங்கே மாப்பிள்ளை காத்து கொண்டிருப்பார்.ஏதாவது வண்டி உடனே இருக்கா? தயவு பண்ணி என்னை அந்த வண்டியிலே ஏத்தி விடேன்.உனக்கு கோடி புண்ணியம் உண்டு"என கேட்டாள்.

"பாட்டியம்மா வேற வண்டி ஒண்ணும் பெங்களூருக்கு இப்போ இல்லை.ஸ்டேஷேன் மாஸ்டர் அய்யாவை இட்டாரேன்.இங்கயே குந்திகுனு இரு.நகை நட்டு போட்டுக்கினு இருக்கே.ஜாக்கிரதை. வேற தெரியாதவங்க பின்னாடி போயிடாதே. "

“இங்கயே இருக்கேன் சீக்கிரம் வாப்பா." என்றாள்

சற்று நேரத்திற்கு பின் ஸ்டேஷேன் மாஸ்டர் அவளருகில் வந்து "என்ன அம்மா, தப்பு வண்டியிலே வந்து இங்கு கஷ்டப்படறீங்களே?வயசும் ஆச்சு,தள்ளாமையும் வந்துடுத்து. பெங்களூருல பெண்ணோட போன் நம்பர் இருக்கா?மாப்பிளைதும் போறும் " என்றார்.

பாட்டி இடுப்பிலிருந்து ஒரு சின்ன பையிலிருந்து ஒரு காகிதம் கொடுத்தாள்..அதில் பெண்ணின் விலாசம் போன் நம்பர் இருந்தது. போர்ட்டரின் உதவியுடன் தன்னுடைய அறைக்கு பாட்டியை மெள்ள அழைத்து சென்றார்.

பாட்டியின் பெண்ணுடைய நம்பர் கிடைத்ததும் தகவலை கூறினார்.பின்னர் " நல்ல வேளை. .தைய்வாதீனமாக காலையில் புறப்படவிருந்த என்னோட பையனும் மருமகளும் சற்று நேரத்தில் பெங்களூருக்கு காரில் கிளம்புகிறார்கள்.அவர்கள் பனஷங்கரியில் இருப்பதால் பாட்டியை ஜயநகரில் உங்கள் வீட்டிலேயே விட்டுவிடுவார்கள்.கவலையே வேண்டாம். உங்களுக்கு சம்மதம் என்றால் அனுப்பிவிடுகிறேன்.என்னுடைய பெயர் மாணிக்கம் காட்பாடி ஸ்டேஷேன் மாஸ்டர்" என்றார்

பெண்ணிற்கு இப்படியும் நல்ல மனிதர்கள் இருப்பார்களா என்று ஆச்சரியம்."உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை.ஆண்டவன் தான் உங்கள் ரூபத்தில் வந்து உதவி பண்ணுகிறார்.அம்மா வெளியில் சாப்பிடமாட்டாள்.கொஞ்சம் வாழைப்பழம்,தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுங்கள்.அவளிடம் பணம் வாங்கி கொள்ளுங்கள்.முடிந்தால் ஒரு வார்த்தை அம்மோவோடு பேசலாமா?. என்று கேட்டு கொண்டாள்.. .

"அம்மா,நான் ஸ்டேஷேன் மாஸ்டரிடம் பேசியாச்சு..கவலைப்படாமல் அவரின் பிள்ளையோடு வா.நான் உனக்காக காத்து கொண்டு இருக்கேன்.அவரிடம் பழம் தண்ணிக்கு உண்டான காசை கொடுத்து விடு." என்றாள்

பாட்டி பையிலிருந்து 100 ரூபாயை "நீ க்ஷேமமாக இருக்கணும்." என்று கூறி போர்ட்டரிடம் கொடுத்தாள்..

மாணிக்கம் "நான் உங்கள் மகன் மாதிரி.காசெல்லாம் வேண்டாம்..பாத் ரூமுக்கு போங்க. இன்னும் பத்து நிமிஷங்களில் வந்து விடுவான் பையனும் மருமகளும்..போய் சேர மூன்று மணிதான் ஆகும்.நல்ல வேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது" என்றார்

Sunday, July 8, 2012

தூக்கமின்மை

"அப்பா ,நாளைக்கு மாடிப்படி ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தரேன்னு வேண்டிகொண்டிருக்கிறேன்.நீங்க கோவிலுக்கு என்னோட வரணும் " என்றாள் பங்கஜம்

" என்ன விசேஷம் ,பங்கஜா "என்றார்

"பெரிசா ஒண்ணுமில்லே.நீங்க தினம் ராத்ரியிலே தூங்காம கஷ்டப்படறீங்க.டாக்டர்களாலே ஒன்னும் கண்டு பிடிக்க முடியலையே..நீங்களும் பல மாதங்களா அவஸ்தை படறீங்களே அப்பா அதுதான் பிரார்த்தனை பண்ணிண்டேன்"

"அசடேஎதுக்குதான்வேண்டிக்கறது?.அல்ப விஷயத்துக்கெல்லாம் ஆஞ்சநேயரை தொந்திரவு பண்ணுகிறாயே.சரி உன் இஷ்டம்" என்றார் தண்டபாணி

மாடிப்படி ஆஞ்சநேயர் கோவில் அப்படி ஒன்னும் பெரிய கோவில் இல்லை.கடைத்தெருவில் இரண்டு கட்டிடங்கள் நடுவில் ஒரு குறுகலான மாடிப்படி. 18 படிகள்தான் மேல சின்ன கோவில்.வேற மொட்டை மாடி கிடையாது. நின்ற திருக்கோலம் கையில் சஞ்சீவி மலையுடன்.விக்ரஹத்தை பார்த்தால் அவருக்கு உள்ள அவசரத்தை கண்டுக்கொள்ளலாம்.வரப்ரசாதினு பிரசித்தம்.ஒரு வயதான மாத்வ அர்ச்சகர்.ஸ்ரத்தையாக பூஜை பண்ணுவார்.

சாயந்திர வேளைகளைத்தவிர கூட்டம் அதிகம் இராது. தனியா ஏற இறங்க வசதியாக.மாடிப்படி நடுவில் ஒரு கயிறு கட்டி இருக்கும்.ஒருவருக்கு பின் ஒருவர் தான் செல்லமுடியும்..நிறைய பக்தர்கள் வெண்ணை, வடை மாலை சாத்துவார்கள்.கடைகளுக்கு வருவோர் போவோர் அனைவரும் ஒரு நடை கோவிலுக்கு செல்வது வழக்கம்.

மறு நாள் பங்கஜம் பாலை தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் அரை மாலைக்கு வேண்டிய வடைகளை தயார் செய்தாள்.மாலை 5 மணி அளவில்

."நந்து,நீயும் கூட வா. தாத்தாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு வா..மாடிப்படி சிலவேளை சறுக்கும் என்றாள் பங்கஜம்.

"அம்மா,என்னால் முடியாது.எனக்கு வேற வேலை இருக்கு'என்று நிர்தாட்சிண்யமாக மறுத்து விட்டான்.,

"கவலை படாதே பங்கஜம் .நான் ஜாக்கிரதையாக இருக்கேன்"என்று சமாதானப்படுத்தினார்

கோவில் வீட்டுக்கு அருகாமையில் தான் உள்ளது .பொடி நடையாக
தன அப்பாவை அழைத்து கொண்டு வந்தாள்..

"அப்பா,இந்த வடை மாலையை கையில் வைத்து கொள்ளுங்கள்.நான் பழம்,புஷ்பம்,கிடைத்தால் வெத்திலை மாலையும் வாங்கிண்டு வந்து விடுகிறேன்:என்றாள்.

"கவலை படாமல் போயிட்டு வா.நான் மெள்ள சந்நித்திக்கு போய் அங்கு உட்கார்ந்து கொண்டு இருக்கேன்"

அப்பா,ரொம்ப ஜாக்கிரதை.படி வழுக்கும். கயிரை பிடித்து கொண்டு ஏறுங்கள்" என்றாள் மிக்க கவலையுடன்.

பாதி படி ஏறுகையில் . அர்ச்சகர் "சுவாமி,சௌக்யமா.தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுவதாக உங்கள் பெண் சொன்னாள்.மேல போய் உட்காருங்கோ.ஒரு நொடியில் நான் வந்து விடுகிறேன்"என்றார்..

கோவிலில் ஒரே சப்தம்.பையன்கள் பேச்சும் கும்மாளமும்.மறு நாள் தேர்வு அறிக்கை வரும்..பயத்துடன் வேண்டி கொள்ள சுமார் 16 பையன்கள் கூடி அர்ச்ச்கருக்காக காத்திருந்தனர்

மூச்சிரைக்க கிழவர் ஏறுகையில் திடீரென்று ஒரு நில அதிர்வு,சில நொடிகள்தான் இருந்தும் படியும் கட்டிடங்களும் ஆடியது.அடுத்தக்ஷணம் மேல கோவிலில் இருந்த பையன்கள் தாறுமாறாக அந்த குறுகலான படிகளை விரைவில் தாண்ட முயற்ச்சிகையில் கிழவரை கீழே தள்ளி அவரின் உடல் மேலேயே மிதித்து ஓடிவிட்டனர். .

"அப்பா,அப்பா" என்று கதறியவாறு ஓடி வந்தாள்.கூட பூக்காரி,தேங்காய் கடைக்காரர் என்று பல பேர் விரைந்து வந்தனர்.

கிழவர் கால் மேலே தலை கீழே என்று அலங்கோலமாய் கிடந்தார். யாரோ . ஒருவர் அவரை தூக்க எத்தனிக்கையில் அவரின் தலை சாய்ந்து விட்டது..பங்கஜத்தின் அப்பா என்கிற அலறல் கடைத்தெரு முழுக்க கேட்டது.

அப்பொழுது ஒருவர்'"இந்த ஆச்சரியத்தை பார்த்தீங்களா.?"என்று அந்த வடை மாலை யாரோ மாடி படி சுவரில் மாட்டியிருந்த ஹனுமார் படத்துக்கு சாற்றினால் போல் அழகாக அமைந்து இருந்ததை காண்பித்தார்.

அர்ச்சகர்' "பங்கஜம் அழாதே.ஆஞ்சநேயரின் சந்நிதிலேயே வடை மாலை பிரார்த்தனை நிறைவேறியபின் அவர் உயிர் பிரிந்து இருக்கிறது.அவரின் தூக்கமின்மை இந்த மீளா தூக்கத்தினால் மறைந்து விட்டது..பெரியவருக்கு எது நல்லதுன்னு ஆஞ்சநேய ஸ்வாமிக்குதான் தெரியும்.கவலை படாதே.மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை பாரு" என்றார்

மற்றவர்களை பார்த்து"நீங்கள் அந்த அம்மாளுக்கு உதவி செய்யுங்கள்.நானும் ஸ்நானத்திற்கு பிறகு சில விசேஷ பூஜை பண்ணனும்"என்றார்