Sunday, October 30, 2011

ருக்மிணியின் விருப்பம்

"நாக்கு வரண்டு போறது.கொஞ்சம் ஜில்லுன்னு தீர்த்தம் கொடு,ருக்மணி " என்றாள் பங்கஜம் பாட்டி.

"அதெல்லாம் முடியாது.டாக்டர் அரை பாட்டலுக்கு மேலே தண்ணி கொடுக்க கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிவிட்டார்"என்றாள்

"ஒரு சொட்டு வாயில விடேன். தொண்டை ஒரே எரியறது" என்று கெஞ்சினாள் கிழவி.

"ஏற்கனவே கால் ரெண்டும் அப்பம் மாதிரி வீங்கி இருக்கு.அப்புறம் மூச்சு விட முடியாம கஷ்டபட்டா யாரு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போறது?அவர் பாட்டுக்கு ஆபீசே கதின்னு கிடக்கிறார்.இன்னும் அரை மணிலே சாப்பிடச்சே குடிச்சா போறும்" என்றாள் ருக்மிணி. பாவம் கிழவி,தலையை திருப்பிண்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.

பங்கஜத்துக்கு ஐந்து பிள்ளைகள்,மூன்று பெண்கள். மற்ற எல்லோரும் கையை கழுவி ரெண்டாம் பிள்ளை கோதண்டத்திடம் விட்டு விட்டார்கள்.ருக்மிணி கொஞ்சம் வெடுக்குனு பேசுவாள். ஆனால் மனது இளகியது.குறை ஒன்றும் இல்லாமல் பார்த்து கொள்வாள்.பாக்கி ஒர்ப்பிடிகள் மாமியாரை கிட்டநெருங்கவிடாதுகள்.ஏதோ காரணம், இடம் போறாது,,குழந்தைகள் படிக்கிறார்கள்
,தன்னோட அம்மா அப்பாக்கு வேற இடமில்லை,பணக்கஷ்டம்,வெளிஊரு என்று ஆயிரம் சால்ஜாப்புகள்.இருந்தாலும் இங்க எப்போவாவது வெறும் கையோடு வரும்பொழுது மாமியார் காதில் விழும்படியாக "ருக்மிணி, அம்மா கேட்டதை பண்ணி கொடு,ரொம்ப வயசாச்சு அவ்வளவு கண்டிப்பா இருக்க வேண்டாம் ' என்று மேம்போக்காக பேசிவிட்டு செல்வார்கள்.ருக்மிணி கண்டு கொள்ள மாட்டாள்.பாவம்,அவளுக்கு குழந்தை இல்லை.வசதியாக இருந்தாள்.நிறைய ச்நேகிதிகள்.ஏழைகளுக்கு உதவி செய்ய போய் விடுவாள்.

பங்கஜத்துக்கு கண்ணு அவ்வளவா தெரியலை.டிவி பார்க்க மாட்டாள்.புஸ்தகம் படிக்க முடியாது.மனப்பாடமான ஸ்லோகங்களை வாய் முணுமுணுத்து கொண்டிருக்கும்.முகுந்த மாலை,சுதர்ஷனாஷ்டகம்,ரகுவீர கத்யம் மட்டும் சொல்ல தெரியாது. ருக்மிணி எப்போவாவது பங்கஜம் கேட்டால் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு படிப்பாள்.விஷ்ணு சஹஸ்ரநாமம் மாத்திரம் டேப் ரெகார்டர் ல போடுவாள். பங்கஜத்துக்கு பேச்சு துணை யாரும் இல்லை.நாள் முழுவதும் தனிமை தான்.பங்கஜத்தின் தம்பி பேரன் ராமானுஜம் மாதம் ஒரு தடவை அத்தை பாட்டியை பார்க்க வருவான்.அவன் ஒரு வக்கீல்.ஏதோ இருவரும் கச முசவென்று பேசி கொண்டிருப்பார்கள்.ருக்மிணி அருகில் போவதில்லை.

பங்கஜத்துக்கு ஒரு வாரமாக ஒரே அசதி.படுக்கையில் நாராக துவண்டு கிடந்தாள்.உட்கார கூட ஸ்ரம பட்டாள்.ஒரு நாள் காலை 11மணி இருக்கும்.ருக்மிணி மாமியார் அருகில் ஸ்லோகங்களை படித்து கொண்டு இருந்தாள்.திடீரென்று தலை சாய்ந்து விட்டது.பதறி போய் டாக்டரை கூப்பிட்டதில்"பாட்டி இறந்து முப்பது நிமிஷம் ஆச்சு"என்று சொல்லி கிளம்பிவிட்டார்.ருக்மிணிக்கு கை கால் ஓடலை.கண்களிலிருந்து பொலபொல வென்று தண்ணி கொட்டியது.சொல்லவொணா துக்கம் அடைத்தது.முதலில் கோதண்டம் பின்னர் எல்லா அண்ணன் தம்பிகள் அவர்கள் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாச்சு.

கார்யம் எல்லாம் முடிந்து இரெண்டாம் நாள் குடவாசல் வாத்யார் என்ன என்ன பண்ணனும் நு சொல்லி கொண்டிருந்தார். "கார்யம் எல்லாம் நன்னா ஸ்ரத்தையா தான தர்மத்தோடு விமரிசையா பண்ணனும்'என்றாள் மூத்த மருமகள்.இன்னும் இருவர் தலையை ஆட்டினர்.பிள்ளைகளும் ஆமோதித்தனர்.ஒருத்தி சொன்னாள்'மாமியார் இஷ்டப்படி தண்ணி குடிக்க கூட முடியாம கஷ்ட பட்டார்.நல்ல வெள்ளி சொம்பா தானம் பண்ணனும்."இன்னொருத்தி மாட்டு விக்ரகம் எல்லாம் கூடாது.நிஜ பசு மாட்டையேகொடுக்கணும்"என்றாள்.இப்படி ஒவ்வொருத்தர்ஒன்னொன்னுசொல்லிகொண்டிருந்தார்கள். மூத்த பிள்ளை "சேவா காலம் நிறைய பாசுரங்களை சேவித்து அரையும் குறையும் இல்லாமல் முழுமையா பண்ணனும்.சுபத்துக்கு நூறு பேருக்கு குறைவில்லாமல் வருவா 'என்றார்.

வாத்யார் மௌனமாக எல்லோரையும் கேட்டுவிட்டு சொன்னார்.'நீங்கள் எல்லாம் ஸ்ரத்தையாக பண்றேள்.ரொம்ப சந்தோஷம்.பாட்டி ஆத்மாக்கு நல்லது.தானம் தான் அவங்களை கரை சேர்க்கும்.உங்கள் இஷ்ட படியே பண்ணலாம்.குறைந்தது மூன்று லக்ஷம் ஆகும்'"

ஒரே நிசப்தம்.ஒருவர் ஒருவர் முகங்களை பார்த்து கொண்டனர்.கடைசி மாட்டு பெண் சொன்னாள்" ஆகட்டுமே பரவாயில்லை.எல்லோரும் தான் இருக்கோமே."

"அது எப்படி?மாதா மாதம் மாமியாருக்கு பென்ஷன் வரதே.செலவு ஒன்னும் இல்லையே.எல்லாம் சேர்ந்து இருக்குமே" என்றாள் மூத்த மருமகள்.

அப்பொழுது பங்கஜத்தின் தம்பி பேரன் வக்கீல் ராமானுஜம் சொன்னான் "அத்தை பாட்டி என்னிடம் எல்லாம் சொல்லி இருக்கா.அதை விவரமா பதிமூணாம் நாளுக்கு பிறகு சொல்றேன்.காரியத்துக்கு வேணுங்கிற பணம் நிறைய இருக்கு. கவலை வேண்டாம்.ஒன்னையும் குறைக்க தேவை இல்லை."

குடவாசல் வாத்யார் "எல்லாம் ஏற்பாடு பண்ணிடறேன்.நன்றாக குறை இல்லாமல் இந்த ஆத்துலேயே பண்ணிடலாம். கார்ட் இன்னும் ஒரு நாளில் கொடுக்கறேன்.அப்போ நான் உத்திரவு வாங்கிக்கறேன்"என்றார்.

காரியம் எல்லாம் சாஸ்த்ரோக்தமாக முடிந்தது.வாத்யார் தாராளமாக தக்ஷிணை,குடை விசிறி வேஷ்டி டவல் என்று எல்லோருக்கும் கொடுத்தார்.கோவிலில் இருந்து மாலை,பரிவட்டம் வந்தது சுபஸ்வீகாரம் சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது. . எல்லோருக்கும் ஒரு திருப்தி.

அன்று மாலை நாலு மணிக்கு ராமானுஜம் எல்லோரையும் ஹாலுக்கு வரச்சொன்னான்."நான் வக்கீல்னு உங்களுக்கு தெரியும்.அத்தை பாட்டி முறைப்படி என்ன பண்ணனும் என்பதை பற்றி எழுதி கொடுத்து விட்டு போயிருக்கா.தன்னுடைய பெண்கள் பிள்ளைகள் எல்லோரும் வசதியாக இருக்கிறார்கள்.தன் பணத்தை பிரித்தால் ஆளாளுக்கு குறைவாகத்தான் கிடைக்கும்.ஆகையால் பாங்கு,டிபாசிட்கள் இருக்கிற பணத்தில் தன்னுடைய காரியத்துக்கு போனதை தவிர மீந்ததை பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கும்,அதை ஓட்டினா போல் உள்ள பள்ளிக்கூடத்துக்கும் சரி பாதியாக பிரித்து கொடுத்து விட சொன்னாள். தன்னுடைய நகைகளை ருக்மிணிக்கு சேர வேண்டியது என்று கூறி இருக்கிறா பாட்டி" என்று சொன்னான்.

சில நிமிஷங்கள் யாரும் பேசவில்லை.திடீரென்று அந்த நிசப்தத்தை மூத்த மருமகள் கலைத்தாள்."மாமியார் சொத்து,மாமியார் நகை,யாரும் அதுக்கு ஆசை படவில்லை.என்ன வேண்டுமானாலும் பண்ணி கொள்ளட்டுமே.பெருமாள் புண்ணியத்துலே நாங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறோம்"என்றாள்.கடைசி மருமகள் “மாமியார் சரியாகத்தானே பண்ணி இருக்கிறார்.அவர் நியாயம் தெரிந்தவர்.ருக்மிணி ஓர்பிடி தானே நன்றாக கவனித்து கொண்டார்.எல்லாமே அவருக்கே கொடுத்து இருக்கலாம்.மாமியார் பண்ணினது எனக்கு பரம திருப்தி"என்றாள்.மற்ற மருமகள்கள் தலையை அசைத்தனர்.பெண்கள் ஒன்றும் சொல்லவில்லை.

அப்போது ருக்மிணி கோதண்டத்தை பார்த்து "எனக்கே நிறைய நகை இருக்கு.குழந்தை குட்டி இல்லை.அம்மா நகைகளை பெண்களுக்கே கொடுத்து விடலாம்.என்ன சொல்றேள்?" என்று சொன்னாள்.

கோதண்டமும் "எனக்கும் அதுதான் சரியாக படுகிறது"என்றார்.

மூன்று பெண்களும் ஒரு சேர "ருக்மிணி மன்னிக்குதான் சேரணும்.அதுதான் எங்கள் விருப்பமும் என்றார்கள்.ருக்மிணி சிரித்தவாரே"என்னோட விருப்பத்தையும் நீங்கள் கேட்டாகணும். என்னுடைய நகைகளையே ஏழை பெண்கள் கல்யாணத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கொண்டு இருக்கிறேன்.அம்மா நகைகள் பெண்களுக்கு சேருவதுதான் நியாயம்.மறுக்க வேண்டாம் தயவு செய்து நீங்களே எடுத்து கொள்ளுங்கள் "என்றாள். .

ராமானுஜத்திற்கு அத்தை பாட்டி போட்டோவிலிருந்து லேசாக சிரித்த மாதிரி தோணித்து.

Wednesday, October 12, 2011

எழுத்தரின் சின்ன தப்பு

சின்ன கல்யாண மண்டபம்.வாசலில் தோரணம் ,கலர் விளக்கு,பெரிய கோலம்.ஜே ஜேன்னு கூட்டம்.உள்ளேயிருந்து மெல்லிசா மேள சப்தம் வந்து கொண்டிருக்கிறது.உள்ளே பழனிச்சாமியின் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம். எல்லோரும் வந்துவிட்டனர்.புரோகிதர் 7 மணி அளவில் ஆரம்பிக்க ஏற்பாடு.
பழனி சாமியின் பெண் அமிர்தா அலங்காரத்தோடு பளிச்சென்று நண்பிகள் கூட சிரிப்புடன் பேசிகொண்டிருந்தாள்.பட்டு புடவைகளில் பெண்கள் கூட்டம்.மல்லிகை வாசனை எங்கும். பழனிசாமி குறுக்கு நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.கடியாரம் 6.30-pm காட்டி கொண்டிருந்தது.முக்யமான உறவினர்கள் மேடைக்கு அருகில் இருந்தனர்.மாப்பிளை பையன் நண்பர்களுடன் சற்று தூரத்தில் காணப்பட்டான்.

திடீரென்று வாசலில் ஒரு கச முசா.என்ன ஏது என்று திரும்பி பார்க்கையில் ஜீப்பிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் உள்ளே நுழைய எத்தனித்தனர்.எல்லோரின் தலைகளும் அங்கு திரும்பின.

"யாரையா பழனி?" என்று ஒரு போலீஸ்காரர் கூவ,பழனிச்சாமி பதட்டுத்துடன் அருகில் சென்றார்.பலர் அவரை சூழ்ந்தனர்.திடீரென்று அவர் சில்க் ஜிப்பா கலவரத்தில் தெப்பலாக நினைந்து விட்டது.

"நான்தான், பழனிச்சாமி.என்ன வேண்டும்?" என்று மென்மையாக கேட்டார்.

"இன்ஸ்பெக்டர் அய்யா உங்களை உடனே இட்டார சொல்லி உத்திரவு போட்டிருக்கார்" என்றனர். அதற்குள் மாப்பிள்ளை பையனோட தகப்பனார் அருகில் வந்து சேர்ந்தார்.

எதற்கு?நான் ஒரு புகாரும் கொடுக்கவில்லையே.போலீசுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே.ஏதோ தப்பாக இருக்கு" என்றார்.
"எங்களுக்கு அதெல்லாம் தெரியாது.உங்களை கையேடு இட்டார சொல்லி உத்திரவு. கிளம்புங்க"

என்றார்.

"இங்க பெண் நிச்ச்யதாம்புலம் ஆரம்பிக்க உள்ளது.எல்லோரும் கூடியாச்சு .முடிந்தவுடன் வந்து பார்க்கிறேன்.இந்த சமயம் நீங்க இங்க இருப்பது சரியாக படவில்லை போன் நம்பர் கொடுங்க .அவரிடம் பேசுகிறேன். இன்னும் ஒரு மணியில் நானே அங்கு வந்து விசாரிக்கறேன் "என்றார் சாந்தமாக.

மாப்பிளை பையனின் மாமா"என்ன விஷயமாகன்னு கொஞ்சம் கோடி காண்பிச்சா உபயோகமாக இருக்கும்"என்று போலீஸ்காரரிடம் கையில் பர்சோடு வினவினார்.

"எங்களுக்கு சரியாக தெரியாது.அந்த பூக்கார பொம்பளை கண்ணீரும் கம்பலையுமா வயத்தை சாச்சிண்டு புலம்பிக்கொண்டு இருக்கா.யாரோ பழநியாம் இந்த கதிக்கு கொண்டு வந்துவிட்டு நழுவ பார்க்கிறானாம்"

"என்னய்யா உளறுகிறே.பார்த்து பேசு.ஏதோ ஆள் மாறாட்டம்.தப்பான இடத்துக்கு வந்து அசிங்கமாக பேசிண்டு இருக்கே.இப்போவே பெரிய இடத்துக்கு பேசறேன்.நான் யாரென்று தெரியுமா" என்றார் பழனிச்சாமி மிக்க கோபத்துடன்

"நீதான் மரியாதை இல்லாம பேசரே.ஏதோ பெரிய இடத்து மனுஷனாச்சேன்னு மரியாதை கொடுத்தா எகிறுகிறாயா? வா கையோடு"என்று கையை பிடித்தார் போலீஸ்காரர்.

மண்டபத்தில் ஒரே கசமுசா.பழனிச்சாமியின் மனைவி வாயை பொத்தி அழ ஆரம்பித்து விட்டாள்.உறவினர்கள் முகங்களில் ஈயாடவில்லை. மேள சப்தம் நின்று விட்டது. பையனை சேர்ந்தவர்கள் வாயில் முகப்பில் கூடிவிட்டனர்.

அதே சமயம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் எழுத்தரை கடுமையாக சாடி கொண்டு இருந்தார்."எவ்வளவு வருஷமாக வேலை பார்க்கிறே?மொட்டையா பழனி நு எழுதி இருக்கியே.இந்த வடபழனி ல எல்லோரும் பழனி தான்.அந்த பொம்பளையை ஆள் வயது என்ன,எப்படி இருப்பான்,விலாசம் என்ன,கருப்பா வெளுப்பான்னு என்று ஒன்னும் கேக்காம என்னய்யா எழுதி இருக்கீங்க அந்த ப்ருஹஸ்பதிங்க ரெண்டு பேரும் யாரவது தப்பான ஆளை கூட்டி வந்தா என்னோட வேலை போய்விடும் தெரியமா?முட்டாள்களோடு மாரடிக்க வேண்டிருக்கு"என்று புலம்பினார்.

"ஏம்மா வாயை மூடிண்டுருக்கே?அந்த பழனி யாரு எப்படி இருப்பான்னுசொல்லு"

உடலை நாணிக்கொண்டு சற்று சிரிப்புடன் "அம்சமா இருப்பான்.28 வயது இருக்கும்.கொஞ்சம் குள்ள பையன்.,.எங்க இருக்கான்னு சொல்ல மாட்டான்.ஆனால் அடிக்கடி வந்து போய்கொண்டு இருப்பான்.நன்னா ஆசையா இருப்பான். நிறைய பணம் கொடுப்பான்.என்னோட புருஷன் சோடை. குடிச்சுட்டு வெளில தேமேன்னு கிடக்கும்.ஒன்னும் கண்டுக்காது."

அந்த சமயம் வாசலில் ஜீப்பும் பல கார்களும் சரக் சரக்கென்று வந்து நின்றன..

சில்க் ஜிப்பால உசரமாக ஆஜானுபாகுவாக சற்று குனிந்த தலையுடன் கலவரத்துடன் பழனிச்சாமி நுழைந்தார். இன்ஸ்பெக்டர் முகத்தில் 1000 வோல்ட் ஷாக்கு.எழுந்து நின்றார்

"பெண்ணோட நிச்சய தாம்பூலம் நடக்கிற சமயம் இவங்க அங்கு வந்து அசிங்க படுத்தி விட்டாங்க.என்ன சொல்லியும் கேட்கவில்லை.என்னை எதற்கு வர சொன்னீங்க?சீக்கிரம் சொல்லுங்க.அங்க என்ன நிலவரம் என்று புரியாம குழம்பி கொண்டு இருக்கேன்"என்றார்.

அந்த பொம்பளை'இவர் இல்லை.பெரிய மனுஷனாச்சே" என்று கூறி கொண்டிருந்தாள்'

"மன்னிக்கவும்.இந்த மடையன்கள் இடம் ,பொருள் தெரியாமல் ஆள் மாராட்டம்னு புரிஞ்சுக்காமல் உங்களை அனாவசியமாக தொந்திரவு பண்ணி விட்டார்கள்.ரொம்பவும் தாழ்மையுடன் எங்களை மன்னிக்க வேண்டுகிறேன்"என்றார் இன்ஸ்பெக்டர்

மறு வார்த்தை பேசாமல் அந்த க்ஷணமே வந்தவர்களுடன் மண்டபத்திற்கு விரைந்தார்.மண்டபம் விரிச்சோடி கொண்டிருந்தது

Friday, October 7, 2011

கை ராசி

சக்ரபாணி அய்யங்காருக்கு 64வயது இருக்கும்.நெஞ்சு வலி வந்த பிறகு வீட்டோடு தான் இருக்கிறார்.வாசல் ஹாலில் உள்ள கட்டில், சாய்வு நாற்காலி தான் இவருக்கு வாசம்.அளந்து பேசுவார் கோபமே வந்து பார்த்தது இல்லை.சற்று ஒடிசலா,உயரமா, வெளுப்பா கம்பீரமாக இருப்பார்.நெற்றியில் சிகப்பில் ஒரு கீற்று .ரேடியோ, பேப்பர் இது இரண்டு தவிர வேறு பொழுது போக்கு இல்லை. பென்ஷன் வந்து கொண்டிருகிறது. பணக்கஷ்டமில்லை.

அவர் மனைவி செண்பகம் ரொம்ப சாது.சற்று குள்ளம்,தாட்டியாக இருப்பாள் ஆனால் களையான முகம்.இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள்..ரொம்ப அன்னியோன்யம்.

இந்த கதையில் ராஜி ரொம்ப முக்யமான பாத்திரம்.காலையில் கீரை விற்பாள். மாலையில் பழங்கள் கொண்டு வருவாள். செண்பகம் தினம் கீரையும்,சாத்துக்குடி பழமும் வாங்குவாள். கிட்டத்தட்ட மூன்று வருஷமாக விடாமல் ராஜி கொடுத்துக்கொண்டு இருக்கிறாள்..அவளுக்கு 40 வயது இருக்கும். நல்ல உடல் வாகு.வசீகரமான சிரிப்புடன் மிகவும் அழகாக இருப்பாள்.அவள் புருஷன் போறாது .எப்பொழுதும் குடி.வேலைக்கும் ஒழுங்கா போவது இல்லை.மூன்று குழந்தைகள் வேறு.ராஜி சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடுகிறது. மாமியிடம் அடிக்கடி தன அங்கலாய்ப்பை எல்லாம் சொல்லுவாள்.மாமியும் கவனமாக காது கொடுப்பாள்.ரொம்ப கஷ்ட படும்போழுது நூறோ இருநூறோ கொடுப்பாள்.அய்யங்காருக்கு மனைவி ராஜிக்கு உதவியாக இருப்பதில் ரொம்ப சந்தோஷம்.

சரி,கதையின் முக்யமான சமாசாரத்துக்கு வருவோம்.

காலையில் 6மணிகெல்லாம் வாசலில் ராஜியின் குரல் கேட்கும்."முளை கீரை,சிறு கீரை,பொன்னாங்கனி கீரை,மெந்திய கீரை....".பச்சை பசேலென்று பார்க்கவே வாங்கும் போல தோன்றும்.மாமி தான் கூடையை இறக்க உதவி பண்ணுவாள்.

ஆனால் ராஜி "கீரையை தொடாதே.அய்யாவை கூப்பிடு.அவர் தொடட்டும்'என்பாள்.மாமி மூஞ்சி வாடிவிடும்.

சில நாட்கள் மாமி சொல்லுவாள்"அவர் குளித்துக்கொண்டு இருக்கார்.நான் எடுத்தா என்ன?உன்னோட பெரிய கீரை தேஞ்சா போய்விடும். என்னமோ அய்யா அய்யான்னு சொல்லிண்டு இருக்கே" என்பாள் மாமி சலிப்புடன்.

“உன்னோட கை பட்டா விற்று போகாது. அய்யா கை ராசியான கை.அவர் தொட்டால் ஒரு மணி நேரத்தில் எல்லாம் விற்றுடுவேன்.தப்பா எடுத்துக்காதே.நீ தொடாதே.அந்த மவராசன் வரும் வரை காத்து கொண்டு இருக்கேன்" என்பாள்.

ஒருமையில்தான் பேசுவாள்.மாமி முகத்தை சுளிச்சுகொண்டு அய்யங்காரிடம் சற்று ஏகத்தாளமாக "உங்க ராஜி வந்து இருக்காள்.நீங்க தொட்டாதான் விற்று போகுமாம்.உங்க கை ராசியாம்.என்ன ராசியோ தெரியலை. நானும் உங்களோடு நாற்பது வருஷமாக குடுத்தனம் பண்ணுகிறேன்" என்பாள்.

மாமியின் பேச்சில் உள்ள நக்கல் புரிந்தாலும் சற்று பெருமிதத்துடன் சிரித்தபடி வாசலுக்கு வருவார்."ராஜி,பிறர் மனம் நோகும்படியாக பேசக்கூடாது"என்று சொல்லி இரண்டு கீரை கட்டை எடுத்துகொள்வார்.

"தப்பா பேசலைஅய்யா.நீ தொட்டா நேரத்தோட வீட்டுக்கு போவேன் அய்யா.அதுதான். அம்மாவபற்றி எனக்கு தெரியாதா என்ன?" என்று சமாதான படுத்துவாள்.

இரண்டு நாள் கீரைக்காரி வராவிட்டால் மாமி "என்ன,உங்கள் ராஜி இரண்டு நாளாக காணலை"என்பாள்.மாமியின் மனதில் என்னவோ ஏதோ என்று ஒரு கவலை.அவரும்"நானும்தான் உன்னிடம் கேட்கனும்னு இருந்தேன் "என்பார்.அந்த ராஜி அந்த அளவு முதியவர்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டாள்.

ஒரு நாள் மாலை 7மணி அளவில் "செண்பகம்,மாரை வலிக்கறது.மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது..டாக்டரை வரச்சொல்லேன் உடனே"என்றார்.மாமிக்கு கை கால் ஓடவில்லை. அப்படியே வாசலுக்கு ஓடி எதிர்த்த வீட்டு பையனை'ரங்கா,ரங்கா உடனே டாக்டரை கூப்பிடு.மாமாக்கு மூச்சு விடமுடியலை."என்று கத்தினாள்.உடனேயே டாக்டர்,மற்ற அக்கம் பக்கத்து மனிதர்கள் வந்துவிட்டார்கள்.ஆனால் ஒன்னும் பண்ண முடியவில்லை.உடனேயே உயிர் பிரிந்து விட்டது.
மறு நாள் ராஜி அவர் உடலை பார்த்து தன்னுடைய சொந்த அப்பா இறந்த மாதிரி தாங்க முடியாத துக்கத்துடன் அழுதாள்.

இரண்டு மாதங்கள் ராஜி மாமியின் கண்ணுலயே படவில்லை.மாமிக்கு அவளை பற்றிய கவலையும் சேர்ந்து வாட்டியது.ஒரு நாள் ராஜியின் தங்கையை வாசலில் பார்த்தாள். கூப்பிட்டு விசாரித்ததில் அவள் தங்கை சொன்னாள்."அய்யா இறந்த பிறகு அவள் கீரை விற்பதை நிறுத்தி விட்டாள்.கேட்டால் அந்த மவராசனுடன் அந்த வியாபாரம் நிந்ததுதானாம்.பிரமை பிடிச்ச மாதிரி இருந்த அவள் இப்பொழுது தான் அவள் குடிசை வாசலில் இட்டிலி சுட்டு ஏதோ இருக்கிறாள்"என்றாள்

:என்னே இத்தனை பாசம் அவரிடம் என்று மாமி திக்கித்து போனாள்.சுதாரித்துக்கொண்டு . "அவளை வந்து என்னை பார்க்க சொல்லு" என்றாள் மாமி.

ஒரு வாரம் கழித்து வந்தாள்.முகம் வாடி இருந்தது.மாமியை பார்த்தவுடன் அழுதாள்.பிறகு மாமி சொன்னாள்."எப்பொழுதும் போல ஒரு நடை வந்து விட்டு போ.உன்னோட இட்டிலி வியாபாரம் முடிஞ்ச பிறகு வந்தால் போதும்.மாதம் 2000 ரூபாய் தரேன்.அவர் உன்னோட பேரில் 50000 ரூபாய் எழுதி வெச்சு இருக்கார்..உன்னை தன்னோட பெண் மாதிரி நடத்து நு சொல்லிவிட்டு போயிருக்கார்"என்றாள் மாமி.

ராஜி குலுங்க குலுங்க அழுதுக்கொண்டே இருந்தாள்.